வெள்ளி, 26 செப்டம்பர், 2025

திருமண் எனும் ஸ்ரீ சூர்ணமகிமை

                     ஸ்ரீ மன் நாராயணாய நம

                         ஸ்ரீ மன் நாராயணன்

ஸ்ரீ வைஷ்ணவனின்  பொதுவான  லக்ஷணங்கள்  மூன்று.

(1) கழுத்தில் துளசி மணி (2) நெற்றியில் திருமண் காப்பு (3) பஞ்ச ஸம்ஸ்காரம்

ஒருவர் பஞ்ச ஸம்ஸ்காரம் முடித்து, கழுத்தில் துளசி மணியுடன், நெற்றியில் திருமண் காப்பும் துலங்க லோகத்தில் சஞ்சரிப்பதால் மட்டுமே இந்த அண்டம் உய்கிறது என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

பஞ்ச ஸம்ஸ்காரத்திற்கு முன்பே அனைவரும் திருமண் காப்பினை தரித்து கொள்ளலாம். திருமண் காப்பை தரித்துக் கொள்ள பேதங்கள் கிடையாது, ஸ்ரீ வைஷ்ணவனாக இருந்தல்  மட்டும்  வேண்டும்.

ஆன்மா 101வது நாடியான சூஷூம்னா நாடியை பற்றி உயர் கதியான வைகுண்டத்தை அடைகிறது. இதன் அறிவுறுத்தலே நெற்றியில் திருமண் காப்பை மேல் நோக்கி அணிகின்றோம். திருமண் காப்பினை முதலில் துளசி மண்ணினாலும், திவ்யக்ஷேத்ர மண்ணினாலும் தான் பூர்வர்கள் அணிந்து வந்தார்கள்.

ஸ்ரீ வராஹவதாரம் தோன்றி பூமிதேவியை காத்ததன் பொருட்டு துதிக்க வந்த தேவர்கள், முனிவர்கள் நெற்றி சூன்யமாக இருந்தது கண்டு திருமண் காப்பின் பெருமை பற்றி அருளிச் செய்கிறார் வராஹமூர்த்தி. வைகுண்டத்திற்கு அழைத்து செல்ல உதவும்  ஒரு  சின்னம் தான் திருமண் காப்பு என்று  வராஹமூர்த்தி உபதேசிக்கிறார்.

வராஹமூர்த்தி  கருடனுக்கு ஆணையிட, அவரும் க்ஷீராப்தியிலிருந்து (திருப்பாற்கடல்) பால் கட்டிகளைக் கொண்டு வந்து பல திவ்யக்ஷேத்ரங்களில் தெளித்தார். அந்த கட்டிகள் விழுந்த க்ஷேத்ரங்கள் தான் இன்றளவும் ஸ்வேதகிரி, ஸ்வேத புஷ்கரணி என பல பெயர்களில் விளங்குகிறது, மேலும் திருமண் என்றும் அறியப்படுகிறது.

ஆக திருமண்னை பூலோகத்திற்குக் கொண்டு வந்த அவதாரம் ஸ்ரீ வராஹவதாரம்.

ஆசார்யன் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் போது திருமந்திரத்தை உபதேசித்து திருமண் காப்பை தரித்துக் கொள்ளும் முறையையும் தெரிவிக்கிறார். நெற்றியில் தொடங்கி பன்னிரண்டு திருமண் காப்புகளை உடலின் பல்வேறு அங்கங்களில் அந்தந்த இடத்திற்குரிய ப்ரணவத்தோடு கூடிய நாமத்தை உச்சரித்து கை நகம் படாமல் திருமண்ணைக் குழைத்து இட்டுக் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவின் அழகிய இணை தாமரை திருவடிகளின் வடிவத்தை கொண்டு விளங்குகிறது, மேல் நோக்கி எழுதப்பட்ட திருமண் காப்பு. அடிமூக்கில் இரண்டு அங்குல பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை அங்குலம் இடமும் விட்டு இரண்டு பக்கத்திலும் அரை அங்குலம் தரித்து தலையின் உச்சி வரையிலும் சாற்றிக் கொள்ள வேண்டும்.

                       ஸ்ரீ மகாலட்சும்

ஸ்ரீசூர்ணத்தை சிவப்பு, மஞ்சள் வர்ணமாக திருமண் மத்தியில் சாத்திக் கொள்ள வேண்டும்.



தாயார் மஞ்சள் வர்ணமாக இருக்கும் போது, அவளை குறிக்கும் ஸ்ரீசூர்ணமும் மஞ்சளாக தானே இருக்க வேண்டும்? எங்கிருந்து சிவப்பு வந்தது.

                  ஸ்ரீ லட்சுமி வராகமூர்த்தி

வராஹர் மூலமாகத் திருமண் தோன்றியது என்பதைப் பார்க்கும்போது அவரது மடியில் அமர்ந்திருந்த பிராட்டியின் சரீரம் அவரது அரைச் சிவந்த ஆடையின் மேலன்றோபட்டுக் கொண்டிருந்தது. அதனால் அவளது நிறமும் சிவப்பாயிற்று. அந்த ஸமயத்தில் தோன்றிய ஸ்ரீசூர்ணமும் சிவப்பாயிற்று.

பகவானின் திருமார்பில் நித்யவாசம் செய்யும் மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீநிவாஸனை அடையும் பொருட்டு விளக்கு ஜ்வாலை வடிவில் ஸ்ரீசூர்ணம் தரிக்க வேண்டும்.

ஸ்ரீசூர்ணம் மங்களகரமானது, தெய்வீகமானது, மோக்ஷம் அளிக்கவல்லது.

திருநாமம் என்பது வைணவர்கள் இட்டுக்கொள்ளும் ஒரு புனித சின்னமாக பார்க்கப்படுகின்றது. இதனை திருமண் காப்பு தரித்தல் என வைணவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீமன் நாராயணன் வைணவத்தின் முதல் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார். திருமண் எனும் திருநாமம் திருமாலின் பாதங்களை குறிப்பதாகும்.

வைணவ தத்துவத்தின் படி நாராயணன் ஒருவனே பரமபுருஷன். மற்ற ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவியர்கள் எனப்படுகிறது.

திருமண்ணை ஸ்ரீ சூர்ணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாலட்சுமியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

எப்படி உவர் மண் நம் உடையில் உள்ள அழுக்கை போக்குகிறதோ, அதே போல் நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை இந்த திருமண் தூய்மையாக்குகிறது. புனித இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் இந்த திருமண் சேமிக்கப்படுகிறது


வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை

வைணவ சம்பிரதாயத்தில் வடகலை, தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி  நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாகப் பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிடைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.

திருமண் இட்டுக் கொள்வதில் "வடகலை", "தென்கலை" என இரண்டு யோக முறைகள் உண்டு.


           தென்கலை திருமண் காப்பு

பாதம் வைத்துப் திருமண் போடும் வழக்கம் தென்கலை நாமம் எனப்படும்.

வடகலை திருமண்காப்பு: 

பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்).

நாராயணனின் பனிரெண்டு பெயர்களைக் குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது வைணவர்களின் சம்பிரதாயம்.

                       நம்மாழ்வார்

நெற்றி

மார்பு (மார்பு)

வயிறு (நாபி)

கழுத்து

வலது வயிற்றில்

வலது தோள்பட்டை

வலது கழுத்து

இடது வயிற்றில்

இடது தோள்பட்டை

இடது கழுத்து

பின்புறம் அடிமுதுகு

பின்புறம் பிடரி

மந்திரங்கள்

திருமாலின் 12 பெயர்களை குறிக்கும் வகையில், உடலில் 12 இடங்களில் திருநாமம் இட்டுக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. அவை;

1. நெற்றி - நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘கேசவாய நம’ என்று சொல்ல வேண்டும்.

2. நடு வயிறு (நாபி) - நாபியில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘நாராயணாய நம’ என்று சொல்ல வேண்டும்.

3. நடு மார்பு (மார்பு) - மார்பில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘மாதவாய நம’ என்று சொல்ல வேண்டும்.

4. நடுக் கழுத்து (நெஞ்சு) - நெஞ்சில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘கோவிந்தாய நம’ என்று சொல்ல வேண்டும்.

5. வலது மார்பு - வலது மார்பில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘விஷ்ணுவே நம’ என்று சொல்ல வேண்டும்.

6. வலது கை - வலது புயத்தில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘மதுசூதனாய நம’ என்று சொல்ல வேண்டும்.

7. வலது தோள் - வலது தோளி திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘திரிவிக்ரமாய நம’ என்று சொல்ல வேண்டும்.

8. இடது மார்பு - இடது நாபியில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘வாமனாய நம’ என்று சொல்ல வேண்டும்.

9. இடது கை - இடது புயத்தில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘ஸ்ரீதராய நம’ என்று சொல்ல வேண்டும்.

10. இடது தோள் - இடது தோளில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘ஹ்ருஷீகேசாய நம’ என்று சொல்ல வேண்டும்.

11. பின்புறம் அடிமுதுகு - அடிமுதுகில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘பத்மநாபாய நம’ என்று சொல்ல வேண்டும்.

12. பின்புறம் பிடரி - பிடரியில் திருமண் இட்டுக் கொள்ளும் போது, ‘தாமோதராய நம’ என்று சொல்ல வேண்டும்.

திருமண் இட்டு, அதனால் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் பெற்றிடுவோம்.


நாம் நெற்றியில் புருவங்களுக்கு மேல் பூசும் திருமன், நமது மூளையிலிருந்து கண்கள் வரை செல்லும் நரம்பைப் பிரியப்படுத்தி, கண்களைப் புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

மேலும், தலைமுடியைக் கழுவும்போது நம் தலையில் அடிக்கடி உருவாகும் சீழ் உருவாவதைக் குறைக்கிறது.
மஞ்சள் கலந்த ஸ்ரீ சூர்ணம், தோல் நோய்களைத் தவிர்க்க உதவுகிறது.
எனவே திருமண் பயன்படுத்துவது இரு வழிகளிலும் நல்லது மற்றும் ஒருவரின் வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டுவருகிறது


திருமால் வழிபாடு ஐஸ்வர்யம் தரும் திருமகளோடு இணைந்த வழிபாடு என்பதால் திருமறுமார்பன் லட்சுமி நாராயணன் என்று திரு மகளோடு இணைத்தே பேசுகிறது மாயோன் வழிபாடு ஆழ்வார்கள் மிகுந்த பக்தியும் இறைவனுக்கு அடிமை செய்துகொள்ளுதலை தங்கள் வாழ்நாள் பெரும்பேராக கொண்டவர்கள்
திருமாலின் திருவடியை தங்கள் சிரசின்மேல் திருவடி பதிப்பு செய்துகொள்ளும் சடாரி எனும் திருப்பாத ஆசியாக நமக்கு அழகாக சொல்லி தருகிறார்கள்
மகா பலவானான ஆஞ்சனேயர் கருடர் போன்ற ஆக சிறந்த வல்லவர்களும் ஸ்ரீ மன் நாராயணனுக்கு அடிமை பூண்டு சேவகம் செய்வதை ஆனந்தமாக கருதி கணப்பொழுதும் அவர்கட்டளைக்கு காத்து இருக்கிறார்கள்

அழகும் வல்லப சித்தியும் வளமையும் நீங்கா செல்வமும் நிம்மதி தருகின்ற திருமாலை 
ஸ்ரீமன்நாராயணனின் திருசின்னமான திருமண் திருசூர்ண மகிமை அறிந்து தத்துவ நோக்கமாகவும் சாஸ்திரபூர்வமாகவும் சரணாகதியாக பெரியோர் காட்டிய நல்வழியை பிடித்து நலம் பெருவோம்
வைணவம் பெருங்கடல் ஸ்ரீமத் ராமானுஜர் மத்வர் போன்ற வைணவ ஆச்சார்யர்களை பணிந்து கிருபாசமுத்திர திருமாலின் திவ்ய கல்யாண குணங்களை சிந்தித்து பணிந்து பக்தி பூண்டு ஸ்ரீ தாயார்
 ஸ்ரீமன்நாராயணர் பாதகமலம் பணிந்து உயர்வோம்

ஸ்ரீ பெரிய திருவடிகளை போற்றி

அடியேன் 
இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமண் எனும் ஸ்ரீ சூர்ணமகிமை

                     ஸ்ரீ மன் நாராயணாய நம                           ஸ்ரீ மன் நாராயணன் ஸ்ரீ வைஷ்ணவனின்  பொதுவான  லக்ஷணங்கள்  மூன்று. (1) கழுத...